Thursday, 9 January 2020

பா.ஜ.,வுக்கு எதிரான கட்சிகளின் கூட்டணியில் பிளவு! சோனியா கூட்டத்தை புறக்கணிக்கிறார் மம்தா

கோல்கட்டா: மத்தியில் ஆளும், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டம் குறித்தும், டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை வன்முறை குறித்தும் விவாதிக்க, வரும், 13ம் தேதி, எதிர்க்கட்சிகள் கூட்டத்தை, காங்கிரஸ் தலைவர் சோனியா கூட்டியுள்ளார். இந்த கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.


MamtaBanerjee,SoniaGandhi,BJP,Mamta,Sonia,Congress,WestBengal, சோனியா,மம்தா,கூட்டணி,பிளவு

மத்தியில், பிரதமர் மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணியின் முதல் அரசுக்கு எதிராக, எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்ட, காங்கிரஸ் முயற்சித்தது. ஆனால், வெற்றி பெற முடியவில்லை. கடந்த ஆண்டு, மே மாதம் நடந்த லோக்சபா தேர்தலில் கூட, காங்கிரஸ் தலைமையை ஏற்க மறுத்து, பல கட்சிகள் தனித்து போட்டியிட்டன. பிரதமர் மோடியின் இரண்டாவது ஆட்சிக்கு எதிராகவும், எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் காங்கிரசின் முயற்சி வெற்றி பெறவில்லை. ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரத்திலும், காங்கிரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக, எதிர்க்கட்சிகள் திரளவில்லை.

பாரபட்சம்:
இந்நிலையில், பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில், மதரீதியாக பாதிக்கப்பட்டு, இந்தி யாவுக்கு வந்துள்ள அந்நாடுகளைச் சேர்ந்த சிறுபான்மையினருக்கு, குடியுரிமை வழங்கும் வகையில், மத்திய அரசு குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்தது. அதை பார்லி.,யின் இரு அவைகளிலும் நிறைவேற்றியது. இதற்கு, எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. குடியுரிமை திருத்த சட்டத்தில், பாரபட்சம் காட்டப்படுவதாக கூறி, நாடு தழுவிய அளவில், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

உத்தர பிரதேசம், டில்லி, உட்பட சில மாநிலங்களில், எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டங்களில், வன்முறை வெடித்து, பொதுச் சொத்துக்கள் சேதமடைந்தன. இந்தத் திருத்த சட்டம், எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரள வைத்தது. மத்திய அரசுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்கும் நிலையும் ஏற்பட்டது. இந்நிலையில், டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில், சமீபத்தில் நடந்த கலவரம், குடியுரிமை திருத்த சட்டம் ஆகியவை பற்றி விவாதிக்க, டில்லியில், வரும், 13ம் தேதி, எதிர்க்கட்சிகள் கூட்டத்தை, காங்கிரஸ் தலைவர் சோனியா கூட்டி யுள்ளார்.

இந்த கூட்டத்தில் பங்கேற்க, மா.கம்யூ., இந்திய கம்யூ, திரிணமுல் காங்., ராஷ்ட்ரீய ஜனதாதளம் உட்பட பல எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தக்கூட்டத்தை திரிணமுல் காங்., புறக்கணிப்பதாக அறிவித்திருப்பது, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையில் விரிசலை ஏற்படுத்தியிருக்கிறது. நேற்று முன்தினம், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 10க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள், நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன. இந்த போராட்டத்துக்கு, இடதுசாரி கட்சிகள், காங்கிரஸ் ஆதரவு அளித்தன.

ஏற்க முடியாது:
மேற்கு வங்கத்தில் நடந்த இந்த போராட்டத்தின் போது, பல இடங்களில் வன்முறை வெடித்தது. கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டது. இதனால், மாநில முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி கோபம் அடைந்தார். இந்நிலையில், மாநிலத்தில், சட்டசபை கூட்டத் தொடர் நடந்து வருகிறது. சட்டசபையில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக, தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள், நேற்று வலியுறுத்தினர்.

இதற்கு பதில் அளித்து, முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது: குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை, நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். இதை, மேற்கு வங்கத்தில் அமல்படுத்த அனுமதிக்க மாட்டோம். மேற்கு வங்கத்தில், நேற்று முன்தினம் நடந்த முழு அடைப்பு போராட்டத்தின் போது நிகழ்ந்த, வன்முறையை ஏற்க முடியாது. தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை நான் ஏற்கிறேன். ஆனால், கடையடைப்பு நடத்தப்படுவதால், பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப் படுகிறது. இடதுசாரிகளும், காங்கிரசும், குடியுரிமை திருத்த சட்டத்தை வைத்து, மேற்கு வங்கத்தில் மிக மோசமான அரசியல் செய்கின்றனர். இதை அனுமதிக்க முடியாது. வரும், 13-ம் தேதி, குடியுரிமை திருத்த சட்டம் பற்றி விவாதிக்க, டில்லியில், காங்., தலைவர் சோனியா கூட்டியுள்ள கூட்டத்தில், திரிணமுல் காங்கிரஸ் பங்கேற்காது. நாங்கள் தனித்தே போராடுவோம்.

தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக, சட்டசபையில், கடந்த செப்டம்பரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதுவே போதுமானது. காங்கிரஸ், டில்லியில் ஒரு கொள்கையையும், மேற்கு வங்கத்தில் ஒரு கொள்கையையும் கடைப்பிடிக்கிறது. என்னால், இதை ஏற்றுக் கொள்ள முடியாது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக, எங்களின் போராட்டம் தொடரும். அதே நேரத்தில் மாநிலத்தில் கடையடைப்பு நடத்த விட மாட்டோம்; வன்முறையை அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு, மம்தா பானர்ஜி பேசினார். இதையடுத்து, தே.ஜ., கூட்டணி அரசுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் கூட்டணியில், மீண்டும் பிளவு ஏற்பட்டுள்ளது.

'பா.ஜ.,வை தாஜா செய்கிறார்'
'பா.ஜ., தலைவர்களை தாஜா செய்யவே, சோனியா கூட்டியுள்ள கூட்டத்தை, மம்தா புறக்கணிக்கிறார்' என, இடதுசாரிகள் மற்றம் காங்கிரஸ் கட்சிகள் தெரிவித்துள்ளன.

மார்க்சிஸ்ட் பொலிட் பீரோ உறுப்பினர், முகமது சலிம் கூறுகையில், ''நாட்டையே சுடுகாடாக்கி கொண்டிருக்கும் பிரச்னைகளுக்கு எதிராக, எதிர்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியை, மம்தா தடுக்கிறார். ஆர்.எஸ்.எஸ்.,க்கு ஆதரவாக செயல்படுவது யார் என, இப்போது தெரிந்துவிட்டது. பா.ஜ.,வுக்கு ஆதரவாகவே, மம்தா செயல்படுவது வழக்கமான ஒன்று,'' என்றார்,

மேற்கு வங்க மாநில காங்., மூத்த தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான, அப்துல் மன்னன் கூறுகையில், ''பா.ஜ., தலைவர்களை தாஜா செய்யவே, எதிர்கட்சிகள் கூட்டத்தை, மம்தா புறக்கணிக்கிறார். மம்தா தான் எப்போதும், இரட்டை வேடம் போடுகிறார். பா.ஜ.,தலைவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என, மம்தா விரும்புகிறார்,'' என்றார்.

ஒற்றுமையாக இருக்க முடியாது:


மத்திய அரசுக்கு எதிராக, எதிர்க்கட்சிகளால் ஒரு போதும் ஒற்றுமையாக இருக்க முடியாது. ஏனெனில், இவர்கள், ஆட்சி அதிகாரத்துக்காகவே அரசியல் செய்கின்றனர். இவர்களுக்கு, நாட்டைப் பற்றியும், மக்களைப் பற்றியும் அக்கறை கிடையாது.
- திலிப் கோஷ், மேற்கு வங்க பா.ஜ., தலைவர்