Thursday, 9 January 2020

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் தனி அதிகாரி பதவிக்காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு

சென்னை: தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் தனி அதிகாரிகளின் பதவிக்காலம் மேலும் 6 மாதம் நீட்டித்து சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.


சட்டப்பேரவையில் நேற்று உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் தொடர்பான சட்டங்களில் திருத்தம் செய்வதற்கான சட்ட முன்வடிவுகளை தாக்கல் செய்தார். 

அதில் கூறியிருப்பதாவது: சென்னை ஐகோர்ட் உத்தரவுக்கு இணங்க, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தனி அலுவலர்கள் 2016, அக்டோபர் மாதம் நியமனம் செய்யப்பட்டனர். 

இவர்களின் பதவிக்காலம் 31.12.2019 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அண்மையில் கவர்னரால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசர சட்டத்தின்படி, மாநகராட்சிகளின் மேயர், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.


நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடான பணிகளை முடிப்பதற்காக, கூடுதல் காலம் தேவைப்படுகிறது. இதையொட்டி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தனி அலுவலர்களின் பதவி காலத்தை வரும் ஜூன் 30ம் தேதி வரை, மேலும் 6 மாதங்களுக்கு அல்லது இதற்கான தேர்தலுக்கு பின்பு மன்றத்தின் முதலாம் கூட்டம் நடைபெறும்வரை நீட்டிக்கப்படுகிறது.

மாநகராட்சிகளின் மேயர் மற்றும் நகராட்சிகள், பேரூராட்சிகளின் தலைவர் மற்றும் மன்ற உறுப்பினர் ஆகியோர்களுக்காக கட்சியின் அடிப்படையில் தேர்தல் நேரடியாக நடத்தப்படுகின்றன. இதில், மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் தலைவர் ஆகியோர்களை மறைமுகமாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் இருந்து முறையீடுகள் பெறப்பட்டுள்ளன. 

அதன்படி இதற்காக இனி நடைபெறும் தேர்தல், மறைமுக தேர்தலாக நடத்தப்படும். தமிழ்நாடு மாநில ேதர்தல் ஆணையமானது, பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் தொடர்பான சட்டங்களின் அடிப்படையில், கிராமபுற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் மின்னணு வாக்களிக்கும் இயந்திரங்களை பயன்படுத்துவதற்கு வசதியாக 1994ம் ஆண்டு சட்டம் பரிந்துரை செய்துள்ளது. தற்போது, இந்த சட்டத்தில் 53ம் பிரிவை திருத்துவதற்காக பரிந்துரை செய்துள்ளது. 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தனி அதிகாரிகளின் பதவிக்காலம் மேலும் 6 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளதால் மேயர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கான ேதர்தல் உடனடியாக நடத்தப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஒரே நாளில் 15 மசோதா

சட்டப்பேரவையின் கூட்டத்தின் கடைசி நாளான நேற்று உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு, வேளாண்மை துறை என நேற்று ஒரே நாளில் மட்டும் 15 சட்ட திருத்த மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. 

இதில், உள்ளாட்சி, கூட்டுறவு உள்ளிட்ட பல மசோதாக்களை திமுகவினர் கடுமையாக எதிர்த்தனர். ஆனால் அவர்களின் எதிர்ப்பையும் மீறி 15 சட்டதிருத்த மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டது.