சென்னை: பல்வேறு திட்டப் பணிகளுக்கு 6580.15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி நேற்று இரண்டாவது துணை மதிப்பீடு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
சட்டசபையில் நேற்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்த இரண்டாவது துணை மதிப்பீட்டில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த துணை மதிப்பீடுகள் 6.580.15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய வழிவகை செய்கிறது. பொங்கல் பரிசு தொகுப்புகளுடன் 1000 ரூபாய் ரொக்கத் தொகை சேர்த்து வழங்க 2363.13 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது.

சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்டத்தின் கீழ் இரண்டு மின் தொடரமைப்பு திட்டங்களை நிறுவ 4.332.57 கோடி ரூபாய்க்கு அரசு நிர்வாக அனுமதி அளித்துள்ளது. இத்தொகை ஆசிய வளர்ச்சி வங்கியின் கடனுதவித் தொகை மற்றும் தமிழக அரசின் பங்கு மூலதன உதவியான 1000 கோடி ரூபாயை உள்ளடக்கியது.
திண்டுக்கல், ராமநாதபுரம், நீலகிரி, திருப்பூர், விருதுநகர், நாமக்கல், திருவள்ளூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் துவக்கப்படும் புதிய அரசு மருத்துவ கல்லுாரிகள் மற்றும் மருத்துவமனைகளுக்காக 3266.47 கோடி ரூபாய்க்கு நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக துணை மதிப்பீடுகளில் 90 கோடி ரூபாய் சேர்க்கப்பட்டுள்ளது.
குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஊரக வேலை உறுதி திட்டத்துடன் இணைந்து சிறிய நீர்ப்பாசன ஏரிகள், குளங்கள் மற்றும் ஊரணிகளை புதுப்பிக்கும் பணிகளுக்காக நடப்பாண்டில் 500 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது.
கரும்புக்கான நியாயமான மற்றும் ஆதார விலை நிலுவை தொகையை வழங்க பத்து கூட்டுறவு மற்றும் இரண்டு பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு 144 கோடி ரூபாய் முன்பணமாக அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் நேஷனல் அமராவதி மற்றும் என்.பி.கே.ஆர்.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் தங்கள் பணியாளர்களுக்கு சட்டப்படியான நிலுவைத் தொகைகள் செலுத்த 29 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார் மாவட்டங்களில் நீண்ட கால வெள்ள நிவாரண பணிகளுக்காக 291 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் 2000 புதிய பஸ்கள் வாங்க மாநில போக்குவரத்து கழகங்களுக்கு 450 கோடி ரூபாய் தமிழ்நாடு போக்குவரத்து மேம்பாட்டு நிதி கழகத்திற்கு 150 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
நிலுவை ஊக்க ஊதியம் மற்றும் கருணைத் தொகைகளை செலுத்த மாநில போக்குவரத்து கழகங்களுக்கு முன்பணமாக 206.53 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கோவை விமான நிலையம் ஓடுதளத்தை விரிவாக்க நிலம் எடுத்ததற்கான இழப்பீட்டுத் தொகை வழங்க 189.30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
