Wednesday, 8 January 2020

100 வழித்தடங்களில் தனியார் ரயில்கள்; நிறுவனங்களுக்கு அழைப்பு


புதுடில்லி: நாடு முழுவதும் 100 வழித்தடங்களில், 150 தனியார் ரயில்களை இயக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தனியார் நிறுவனங்களுக்கு 'நிடி ஆயோக்' அழைப்பு விடுத்துள்ளது.


தனியார் ரயில்கள் இயக்கப்படுவது குறித்த கலந்துரையாடலுக்கான வரைவு ஆவணத்தை, 'நிடி ஆயோக்' வெளியிட்டுள்ளது. ஜன.,17ம் தேதிக்குள் இதுதொடர்பான எழுத்துப்பூர்வமான கருத்தையும் கேட்டுள்ளது. அதில், அடுத்த 5 ஆண்டுகளில், நாடு முழுவதும் 100 வழித்தடங்களில், 150 தனியார் ரயில்களை இயக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டணம், வழித்தடம் குறித்து தனியார் நிறுவனங்களே முடிவு செய்து கொள்ளலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தனியார் நிறுவனங்களை தேர்வு செய்ய ஏலம் நடத்தப்படும். இதில் கலந்து கொள்ள தனியார் நிறுவனங்கள் குறைந்தபட்சம் ரூ.450 கோடி சொத்து வைத்திருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 15 நிமிடங்கள் தாமதமானால் பயணிகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்தும் பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. மேலும், சில வழித் தடங்களில் 160 கி.மீ., வேகத்தில் ரயில்களை இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாட்டில், மும்பை - ஆமதாபாத், டில்லி- லக்னோ இடையே தனியார் ரயில்கள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.