புதுடில்லி: 'போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக, புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ள அபராதங்களை குறைக்க, மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை' என, மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.
மோட்டார் வாகன திருத்தச் சட்டம், கடந்த 2019ம் ஆண்டு, செப்., 1 முதல் அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின்படி, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது ஆறு மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால், 5,000 ரூபாய் அபராதமும், தலைக்கவசம் இல்லாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால், 1,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.
இந்த அபராதத் தொகையை குறைத்து, குஜராத், கர்நாடகா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய மாநில அரசுகள் அறிவித்தன. இந்நிலையில், மாநில அரசுகள், அபராதத்தொகையை குறைக்கக்கூடாது என, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

